சென்னை : ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் அட்டவணை மட்டும் தான் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மே 21 ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. மொத்தம் 70 ஆட்டங்கள் லீக் சுற்றில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குவாலிஃபயர் ஒன்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 23ஆம் தேதி முதல் குவாலிஃபயர் ஆட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து மே 24ஆம் தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளி கிடைக்கிறது. மே 26 ஆம் தேதி குவாலிஃபையர் 2 போட்டி அகமதாபாத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு சென்னையில் பிளே ஆப் சுற்று நடைபெறுவதால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு ஒருவேளை தகுதி பெற்றால் தற்போது சொந்த மண்ணிலே விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை சிஎஸ்கே பயன்படுத்திக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அண்மையில் சென்னையில் புதிய கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக சென்னை கடந்த காலங்களில் மிஸ் செய்த போட்டிகள் எல்லாம் தற்போது திரும்பி கிடைக்கிறது.