மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 257 ரன்கள் குவித்த போதும், ராகுல் சஹர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை லக்னோ அணி பதிவு செய்தது.

லக்னோ அணி சார்பாக ஆடிய கைல் மேயர்ஸ் 54 ரன்களும், ஆயுஷ் பதோனி 43 ரன்களும், ஸ்டாய்னிஸ் 72 ரன்களும், பூரன் 45 ரன்களும் விளாசினார். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாசப்பட்டது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரின் எகனாமியின் 12 ரன்களுக்கு மேலாகவே இருந்தது. ஆனால் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹர் மட்டும் 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
லக்னோ அணி சார்பாக 27 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் விளாசப்பட்டிருந்த நிலையில், ராகுல் சஹரின் ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. 257 ரன்கள் விளாசிய போட்டியில் கூட ராகுல் சஹர் 7.2 எகனாமியில் பந்துவீசியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் ராகுல் சஹர் தனது பழைய ஃபார்முக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

எப்படி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 263 ரன்கள் குவித்த போது, புவனேஷ்வர் குமார் மட்டும் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து அசத்தினாரோ, அதேபோல் ராகுல் சஹர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் ராகுல் சஹர் போல் இன்னொரு முழு நேர ஸ்பின்னர் இருந்திருந்தால், லக்னோ அணியால் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்திருக்க முடியாது என்றும் பார்க்கப்படுகிறது.