மொஹாலி: ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி விளையாடவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் கண்டுள்ளது. கடந்த போட்டியில் மும்பை அணியை 13 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் பஞ்சாப் வீரர்கள், கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

அதுமட்டுமல்லாமல் தோள்பட்டை காயத்தால் கடந்த 3 போட்டிகளில் களமிறங்காத கேப்டன் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பஞ்சாப் அணியின் பேட்டிங் மேலும் வலுவடையும். அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சாம் கரண், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் ரபாடாவும் இணைந்தால், அந்த பந்துவீச்சு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமையும்.
அதுமட்டுமல்லாம்ல் ஆட்டம் மொஹாலி மைதானத்தில் நடப்பதால், பஞ்சாப் அணிக்கு உள்ளூரில் ஆடுவது சாதகமான அம்சமாக இருக்கும். மறுபக்கம் லக்னோ அணியும் 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி, 3ல் தோல்வி என்று 8 புள்ளிகளுடன் இருக்கிறது. கடைசியாக ஆடிய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 136 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் லக்னோ தோல்வியடைந்தது.
இதற்கு அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் எச்சரிக்கையான ஆட்டம் காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் வலிமையான பந்துவீச்சை எதிரணி கொண்டிருந்தால், லக்னோ அணி வீரர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள். இதற்கு இந்தப் போட்டியில் லக்னோ அணி முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த சீசனில் பஞ்சாப்பிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த லக்னோ அணி, அதற்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மொஹாலி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும் என்பதால், எந்த அணி குறைந்த அளவிற்கு தவறு செய்கிறதோ, அந்த அணியே வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.