தரம்சாலா: நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் 5 முறை டக் அவுட்டாகி, ஒரே சீசனில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. அதில் ரபாடா வீசிய 2வது ஓவரில் பட்லர் டக் அவுட்டாகி வெளியேறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 392 ரன்களை குவித்துள்ள பட்லர், 5வது முறையாக டக் அவுட்டாகியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சீசனில் 800க்கும் அதிகமான ரன்களை குவித்த பட்லர், நடப்பு ஆண்டில் ஒரே சீசனில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் 85 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு முறை மட்டுமே டக் அவுட்டாகியுள்ள பட்லர், கடந்த 10 இன்னிங்ஸ்களில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதேபோல் கடந்த மூன்று போட்டிகளில் மூன்று முறையில் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். கடந்த சீசனில் 4 சதங்களை விளாசி, ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக சதங்கள் விளாசிய விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் பட்லர். ஆனால் நடப்பாண்டில் ராஜஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.