ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற 119 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. கடந்த 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளதால், ராஜஸ்தான் அணி வெற்றிபெற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல் பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

காயத்திற்கு பின் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதையடுத்து ஆட்டத்தில் அனல் பறந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் சஞ்சு சாம்சன் பவுணடரி மற்றும் சிக்சர்களை அடித்து அசத்தினார். இன்னொரு பக்கம் ஷமி பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் சிக்சர் விளாசி அசத்தினார். இதனால் ரஷித் கான் விரைவாக அட்டாக்கில் கொண்டு வரப்பட்டர்.
அவர் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 14 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ஜோஷ்வா லிட்டில் வீசிய அடுத்த ஓவரிலேயே சஞ்சு சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த அஸ்வின் 2 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த ரியான் பராக் 4 ரன்களிலும், படிக்கல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இரட்டைக்குழல் துப்பாக்கியாக ரஷித் கானும், நூர் அஹ்மத்தும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை விக்கெட்டை வேட்டையாடினர். பின்னர் வந்த ஜுரெல் 9 ரன்களிலும், ஹெட்மயர் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த போல்ட் மட்டும் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக 17.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.