அகமதாபாத்: 16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடக்கும் 23வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் குஜராத் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. விருத்திமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் ட்வாட்டியா என்று அனைத்து அணிகளுக்கும் சவால் அளிக்கும் பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அதேபோல் இம்பேக்ட் பிளேயராக விஜய் சங்கரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதேபோல் பந்துவீச்சில் ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், மோகித் ஷர்மா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். இருப்பினும் குஜராத் அணிக்கு 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், அந்த அணியால் சேஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல. இதனை கடந்த போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவும் சூசகமாக பேசி இருந்தார். இருப்பினும் ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடப்பதால் குஜராத் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதாக இருக்கப் போவதில்லை.
ராஜஸ்தான் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ஜுரல் ஆகியோர் அருமையான ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் பந்துவீச்சிற்கு திணறியுள்ளனர். இதனால் இருவரையும் சமாளித்து ஆடினால், ராஜஸ்தான் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது.
பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின், போட்ல், ஹோல்டர், சந்தீப் சர்மா மற்றும் குல்தீப் சென் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு கடந்த சீசனை விடவும் கூடுதல் பலத்துடன் உள்ளது. இதுவரை இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள 3 போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. அதனை மாற்ற ராஜஸ்தான் அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.