பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறி வருகிறது. அந்த அணியின் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமலும், யாஷ் துள் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி 50 ரன்களும், லோம்ரோர் 26 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 175 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணி சார்பாக வழக்கம் போல் பிரித்வி ஷா இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார். மோசமான ஃபார்மில் ஆடி வரும் பிரித்வி ஷா, இந்தப் போட்டியிலாவது சில ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஆர்சிபி அணி வெற்றிபெற வேண்டுமென்றால் பவர் பிளே ஓவர்களுக்குள் சில விக்கெட்டுகள் எடுக்க வேண்டிய தேவை இருந்தது.
இந்த நிலையில் கேப்டன் டேவிட் வார்னர் - பிரித்வி ஷா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.முதல் ரன்னை எடுத்து டேவிட் வார்னர் மறுமுனைக்கு செல்ல, அடுத்ததாக பிரித்வி ஷா ஸ்ட்ரைக்கில் வந்தார். சிராஜ் வீசிய 4வது பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சித்தார் பிரித்வி ஷா. அப்போது திடீரென பந்தை தடுத்து நிறுத்திய அனுஜ் ராவத், யாரும் எதிர்பாராத வகையில் சரியாக ரன் அவுட் செய்து டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த புது மாப்பிள்ளை மிட்செல் மார்ஷிம் பார்னல் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் இளம் வீரர் யாஷ் துள் களமிறங்கினார். அவரும் சிராஜ் வீசிய 3வது ஓவரில் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, டெல்லி அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஒட்டுமொத்த மைதானமும் ஆர்சிபி ஆர்சிபி என்று முழக்கம் எழுப்ப, வீரர்களும் அடுத்த விக்கெட்டுகளை வீழ்த்த ஆர்வமாக பந்துவீசி வருகின்றனர்.