பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற 190 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி அணி வெறும் 33 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
16வது ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், இன்றையப் போட்டியிலும் விராட் கோலியே கேப்டனாக களமிறங்கினார். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஷாபாஸ் அஹ்மத்தும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய டூ பிளஸிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி சேர்ந்தது. 3வது ஓவரில் தொடங்கிய இருவரின் அதிரடி எந்த ஓவரிலும் குறையவே இல்லை.
ராஜஸ்தான் அணியின் ஹோல்டர், போல்ட், அஸ்வின், சாஹல் என்று யார் பந்துவீசினாலும் சிக்சர்கள் விளாசப்பட்டது. இதனால் பெங்களூரு அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதன் காரணமாக அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 26 பந்துகளிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய டூ பிளஸிஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் திணறினர்.
13 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டூ பிளஸிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி டைம் அவுட் எடுத்தது. அதன்பின்னர் டூ பிளஸிஸ் 62 ரன்களில் ஆட்டமிழக்க, 15வது ஓவரில் மேக்ஸ்வெல்லும் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். டாப் ஆர்டர் வீரர்கள் வெளியேறிய பின், ஆர்சிபி வண்டி நின்றது. மாஜி ஆர்சிபி வீரரான சாஹலை வைத்தே ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் எளிதாக ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார். சின்னசாமி மைதானத்திலேயே சாஹல் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஆர்சிபி அணியின் லோம்ரோர், பிரபுதேசாய், ஹசரங்கா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி அணி 33 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.