பெங்களூரு: பெங்களூரு அணி பந்துவீச்சு படையின் தலைவர் சிராஜ் தான் என்றும், அவர் இவ்வளவு சிறப்பாக பந்துவீசி நான் பார்த்ததே இல்லை என்று விராட் கோலி பாராட்டியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி ஆடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக மேக்ஸ்வெல் 77 ரன்களும், டூ பிளஸிஸ் 62 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 2 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தினார். கடைசி நேரத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினர்.
இந்த வெற்றி குறித்து விராட் கோலி பேசுகையில், சின்னசாமி மைதானத்தின் பிட்ச் குறித்து டாஸின் போதே சொல்லி இருந்தேன். பிட்ச் அதிகமாக வறண்டு காணப்பட்டது. அதனால் நிச்சயம் 2வது பேட்டிங் செய்வது கடினம என்றே எங்கள் வீரர்களிடம் சொல்லி வந்தேன். எங்களுக்கு பந்து பிட்ச்சில் நின்று போனது ஒரு சாதகமாக மாறியது. சென்னை அணிக்கு எதிரான போட்டியை விடவும், டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. மேக்ஸ்வெல் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் 4 ஓவர்களில் மாற்றிவிட்டார்.
நான் 160 ரன்கள் போதுமானது என்று கருதியபோது, 190 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. சிராஜ் பந்துவீச்சை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இவ்வளவு சிறப்பாக சிராஜ் பந்துவீசி நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய பந்தில் வீசும் போது கூடுதல் உறுதியுடன் உள்ளார். அதேபோல் பர்பிள் கேப்பினை வைத்துள்ளதும் மகிழ்ச்சி. எங்கள் பந்துவீச்சுப் படையின் தலைவன் அவர்தான். அடுத்தப் போட்டியில் ஹேசல்வுட் வரும் போது, பந்துவீச்சு இன்னும் வலிமைபெறும் என்று தெரிவித்தார்.