பெங்களூரு: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதிய முந்தைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூரின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இன்றையப் போட்டியில் ஆர்சிபி அணி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் காயம் காரணமாக இன்றையப் போட்டியில் இம்பேக்ட் பிளேயராகவே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலியே களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி டாஸ் வென்ற நிலையில், விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், ஆர்சிபி அணிக்கு மீண்டும் கேப்டனாக செயல்படுவது ஜாலியாக உள்ளது. ஏனென்றால் ஒரு அணியாக சிறப்பாக விளையாடுகிறோம். கேப்டன்சியை பொறுத்தவரை, சில நேரங்களில் என் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு முடிவு செய்வேன். அடுத்தப் போட்டியில் டூ பிளஸிஸ் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராணா பேசுகையில், நாங்கள் டாஸ் வென்றிருந்தால், பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம் என்று கூறினார். கொல்கத்தா அணி சார்பாக ஷர்துல் தாக்கூர், குர்பாஸ் ஆகியோர் காயம் காரணமாக களமிறக்கப்படவில்லை. இதனால் வைபவ் அரோரோ கேகேஆர் அணிக்காக அறிமுகமாக உள்ளார். அவருக்காக கடந்த போட்டியில் விளையாடிய குல்வந்த் நீக்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, ஷாபாஸ் அஹ்மத், மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயஷ் பிரபுதேசாய், ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார், ஹர்சல் படேல், சிராஜ்
கேகேஆர் அணி விவரம்: ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வீஸா, வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி