பெங்களூரு: ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லரை டக் அவுட்டில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இன்றையப் போட்டியிலும் விராட் கோலியே ஆர்சிபி அணியின் கேப்டனாக களமிறங்கினார். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக மேக்ஸ்வெல் 77 ரன்களும், டூ பிளஸிஸ் 62 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. நடப்பு ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் முகமது சிராஜின் எகனாமி 7.5ஆக மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் 6 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் பட்லர் - சிராஜ் இடையிலான மோதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சிராஜ் வீசிய முதல் 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஜெய்ஸ்வால் எதிர்முனைக்கு சென்றார். அப்போது பட்லர் - சிராஜ் இடையிலான ஆட்டம் தொடங்கியது. 3வது பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படாத நிலையில், 4வது பந்தில் பட்லரின் மிடில் ஸ்டம்புகளை சிராஜ் சிதறடித்தார். இதனால் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்து வெளியேறினார். முதல் பந்தை இன் ஸ்விங்கராக வீசிய சிராஜ், பட்லர் செட் செய்து வீழ்த்தியது பலருக்கும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
பட்லரை வீழ்த்திய பின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல் சிராஜ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பட்லருக்கு குட் பை சொல்லி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். முதல் ஓவரிலேயே சிராஜ் ராஜஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியதால், ஆர்சிபி அணி வெற்றிபெறும் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.