லக்னோ: பெங்களூரு மைதானத்தில் வென்ற பின், லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரலை வாயில் வைத்து ரசிகர்களை பார்த்து "உஷ்"என்று செய்த சம்பவத்திற்கு, லக்னோ மைதானத்தில் வைத்து விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போது, கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பின் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து "உஷ்" என்று அமைதியாக இருக்க வேண்டும் என்று செய்கை செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஆர்சிபி வீரர்களும் கோபமடைந்தனர். இந்த நிலையில் லக்னோ மைதானத்தில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் பிறந்தநாள் என்பதால், அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 30 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனையடுத்து 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்த நிலையில் லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது முதலே விராட் கோலி அதீத ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். முதல் ஓவரில் லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய போதே விராட் கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் வீசிய 4வது ஓவரில் க்ருனால் பாண்டியா 14 ரன்களில் விராட் கோலி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த கேட்சை பிடித்த விராட் கோலி, பெங்களூரு ரசிகர்களை பார்த்து கம்பீர் எப்படி வாயில் விரலை வைத்து செய்கை செய்தாரோ, அதேபோல் விராட் கோலி செய்து பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆயுஷ் பதோனி கேட்சை பிடித்த விராட் கோலி, ஆக்ரோஷமாக கொண்டாட, இன்னொரு பக்கம் மனைவி அனுஷ்கா சர்மா எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார்.