பெங்களூரு: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றையப் போட்டியில் 21 ரன்கள் சேர்த்தால், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்கவுள்ளது. இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 மற்றும் 7 ஆகிய இடங்களில் உள்ளனர். இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

என்னதான் பெங்களூரு அணியின் முகமாக டூ பிளஸிஸ் இருந்தாலும், அந்த அணியின் உணர்வும் உயிருமாய் விராட் கோலி தான் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பெங்களூரு மைதானத்தில் விராட் கோலி ஆடிய மூன்று போட்டிகளிலும் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார். ஆர்ச்சர், மார்க் வுட், நார்கியே என்று தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி வெறியாட்டம் ஆடி இருக்கிறார் விராட் கோலி. அப்படியான ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை எதிர்த்து சென்னை அணி களமிறங்க உள்ளது.
இருந்தாலும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் மேஜிக் சின்னசாமி மைதானத்தில் எடுபடும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளனர். இதுவரை சென்னை அணிக்கு எதிராக 29 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள விராட் கோலி, 9 அரைசதம் உட்பட 979 ரன்களை விளாசியுள்ளார். சென்னை அணிக்கு எதிராக 39.16 சராசரியை வைத்துள்ளதால், இன்றையப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது சென்னை அணிக்கு முக்கியமானதாகும்.
அதேபோல் இன்றையப் போட்டியிலும் விராட் கோலி 21 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், சென்னை அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இவருக்கு முன் சென்னை அணிக்கு எதிராக இந்திய வீரர் ஷிகர் தவான் மட்டுமே ஆயிரம் ரன்களை விளாசியுள்ளார். இதனால் விராட் கோலி பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சின்னசாமி மைதானம் தனது கோட்டை என்று விராட் கோலி நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.