லக்னோ: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற லக்னோ அணிக்கு 127 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லக்னோ அணி சார்பாக முதல் ஓவரே க்ருனால் பாண்டியா கைகளில் பந்தை கொடுத்து அட்டாக் செய்தது.

இருப்பினும் சிறப்பாக ஆடிய விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி 6 ஓவர்களில் விக்கெட் கொடுக்காமல் 42 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 9வது ஓவரில் விராட் கோலி 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபியின் சரிவு தொடங்கியது. தொடர்ந்து வந்த அனுஷ் ராவத் 9 ரன்களிலும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சுயஷ் பிரபுதேசாய் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணி ரன்கள் சேர்க்கவே திணறியது.
கிட்டத்தட்ட 7 ஓவர்களாக பவுண்டரியே அடிக்கப்படவில்லை. இந்த நிலையில் 15.2 ஓவரின் போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. பின்னர் 15 நிமிட இடைவெளியில் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக பவுண்டரியுடன் தொடங்கினார். இதனிடையே சிறப்பாக ஆடிய டூ பிளஸிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தினேஷ் கார்த்திக்கும் 16 ரன்களில் ரன் அவுட்டானார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
தொடர்ந்து கடைசி ஓவரில் கரண் சர்மாவும் 2 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்களை சேர்த்தது. ஏராளமான பேட்ஸ்மேன்கள் தேவையே இல்லாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனால் ஆர்சிபி அணி ஸ்கோர் 15 முதல் 20 ரன்கள குறைந்துள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.