பெங்களூரு: கொல்கத்தா அணியின் சுழல் வலையில் சிக்கி பெங்களூரு அணியின் டூ பிளஸிஸ், ஷாபாஸ் அஹ்மத் மற்றும் மேக்ஸ்வெல் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களும், நிதிஷ் ராணா 48 ரன்களும் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி சார்பாக வழக்கம் போல் இம்பேக்ட் பிளேயராக டூ பிளஸிஸ் களமிறங்கினார். இவருடன் விராட் கோலியும் தொடக்கம் கொடுத்தார். முதல் பந்திலேயே பவுண்டரியோடு தொடங்கிய விராட் கோலி, தொடர்ந்து அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் டூ பிளஸிஸ் உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில், அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசினார்.
இதையடுத்து மூன்றாவது ஓவரிலேயே இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த சுயஷ் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்தது கொல்கத்தா அணி. அதற்கு பலனாக டூ பிளஸிஸை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் சுயஷ் சர்மா. அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதன் பின்னர் வருண் சக்கரவர்த்தி அட்டாக்கில் வந்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி சுழலை வைத்து வலையை பின்னியது தெரிய வந்தது.
மீண்டும் 5வது ஓவரை வீசிய சுயஷ் பந்துவீச்சில் ஷாபாஸ் அஹ்மத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆர்சிபி அணி 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது. இந்த நிலையில் விராட் கோலி - மேக்ஸ்வெல் கூட்டணி சேர்ந்தது. இந்த நிலையில் பவர் பிளேவின் ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் விரிக்கப்பட்ட வலையில் மேக்ஸ்வெல் சிக்கினார். மேக்ஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆர்சிபி அணி 58 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.