கொல்கத்தா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி ரிங்கு சிங் கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, ஜேசன் ராய் - குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தது. ஜேசன் ராய் அதிரடியால் 4 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 36 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நேதன் எல்லிஸ் வீசிய ஸ்லோயர் பந்தில் குர்பாஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இணைந்த ராய் - ராணா இணை, பவர் பிளே ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியின் ஸ்கோரை 52ஆக உயர்த்தியது.
இதன்பின்னர் ஜேசன் ராய் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, வெங்கடேஷ் ஐயர் வந்தார். இதன்பின்னர் நிதிஷ் ராணா அதிரடியாக ஆட, வெங்கடேஷ் நிதானம் காட்டினார். லிவிங்ஸ்டன் வீசிய 11வது ஓவரில் நிதிஷ் ராணா வெளுத்துகட்ட, கொல்கத்தா அணியின் ஸ்கோர் 92ஆக உயர்ந்தது. இந்த சூழலில் பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சஹர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய 3வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இன்னொரு பக்கம் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே நிதிஷ் ராணா ஆட்டமிழந்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரிங்கு சிங் - ரஸ்ஸல் கூட்டணி களத்தில் இருக்க, கடைசி 3 ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிபெற 36 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட, 19வது ஓவரை வீசிய சாம் கரண் பந்துவீச்சில் ரஸ்ஸல் மூன்று சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன் பின்னர் கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிபெற 6 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. 4வது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட, 5வது பந்தில் ரஸ்ஸல் ரன் அவுட்டானார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி பந்தில் ரிங்கு சிங் ஸ்ட்ரைக்கில் இருக்க, அர்ஷ்தீப் சிங் வீசிய டாஸ் பாலை பவுண்டரியாக மாற்றி அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.