அகமதராபாத் : ஐபிஎல் வரலாற்றிலேயே இன்று பரபரப்பான சிறந்த ஆட்டம் ஒன்று நடைபெற்று முடிந்துள்ளது. கொல்கத்தாவும், நடப்பு சாம்பியன் குஜராத்தும் மோதிய ஆட்டம் ரசிகர்களிடையே முதலில் எவ்வித எதிர்பார்ப்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்தப் போட்டி வரலாற்று புத்தகத்தில் இடம்பெறும் என்று யாரும் நினைக்கவில்லை.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இன்றைய ஆட்டத்தில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ரஷித் கான் அணியை வழிநடத்தினார். போட்டி தொடங்கியதும் சாஹா வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்க்க, சுப்மன் கில் நிதானமாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தார்.

அபினவ் மனோகர் 14 ரன்கள் மட்டுமே சேர்க்க, தமிழக ஜோடி சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஜோடி மீண்டும் அணியை காப்பாற்றியது. சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்களை சேர்க்க, அதிரடியாக விளையாடிய விஜய் சங்கர் 24 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குர்பாஷ் 15 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் ஜெகதீசன் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதனையடுத்து இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது பழைய அதிரடியை காட்டினார். 40 பந்துகளை எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர் 83 ரன்கள அடித்து வெளியேறினார். இதில் 5 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.
நிதிஷ் ரானா தன் பங்கிற்கு 29 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 3 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். எனினும் முக்கிய கட்டத்தில் இவ்விருவரும் ஆட்டமிழக்க, ரஷித் கான் வீசிய 17 ஓவரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கொல்கத்தா அணியில் அதிரடி வீரர்கள் ரஸில், சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதனால் குஜராத் அணியின் கை ஓங்கி இருந்தது.
இந்த நிலையில் 8 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங், ஒரு சிக்சரும், பவுண்டரியும் அடித்தார். இதனால் கடைசி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த ஓவரை யாஷ் தயால் வீசினார். முதல் பந்தில் உமேஷ் யாதவ் சிங்கிள்ஸ் ஓட, ரிங்கு சிங் மீண்டும் பந்துகளை எதிர்கொண்டார். யாருமே எதிர்பாராத வகையில், கடைசி 5 பந்துகளிலும், 5 சிக்சர்கள் விளாச, கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பயிற்சியாளர், கேப்டன் என அனைவரும் மைதானத்திற்குள் வந்து ரிங்கு சிங்கை கட்டி அணைத்து கொண்டாடினர்,