ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 242 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளதால், ராஜஸ்தான் அணி வெற்றிபெற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனென்றால் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றால் முதலிடத்திலும், தோல்வியடைந்தால் 6வது இடத்திற்கும் தள்ளப்படும். இதனால் இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு மிகமுக்கிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஃபார்மில் இல்லாத கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் தொடக்க வீரர் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், உடனடியாக சஞ்சு சாம்சன் களம் புகுந்தார். தொடக்க முதலே அதிரடியாக ஆடிய அவர், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அபாரமான சிக்சரையும் பவுண்டரியையும் விளாசினார். தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வரும் ஷமி பந்துவீச்சிலும் பவுண்டரியை விளாசி அசத்தினார். இதனால் இன்றைய நாள் சஞ்சு சாம்சனுடைய நாளாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் 7வது ஓவரை வீச ஜோஷ்வா லிட்டில் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் முதல் 4 பந்துகளிலேயே 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. இருப்பினும் 5வது பந்தில் பவுண்டரி அடிக்க முற்பட்டு எட்ஜாகி சஞ்சு சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 242 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதில் வெறும் 2 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் இன்கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வருவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தி வருகிறது.