ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சந்தீப் சர்மாவின் கால்கள் எல்லை தாண்டியதால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்கோ யான்சன் சந்தீப் சர்மாவுக்கு முன்பாகவே கிரீஸில் இருந்து வெளியேறியது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சந்தீப் சர்மா வீசிய நோ-பால் காரணமாக ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

கடைசி பந்தில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயன்று அப்துல் சமத் கேட்ச்சானார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றதாக வீரர்கள் கொண்டாடிய நிலையில், திடீரென நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். அதில் சந்தீப் சர்மா கிரீஸை தாண்டி கால்களை வைத்து பந்துவீசியது தெரியவந்தது. பின்னர் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் அப்துல் சமத் சிக்சர் விளாசி ஐதராபாத் அணியை கரை சேர்த்தார்.
சந்தீப் சர்மா வீசிய நோ-பால் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் சந்தீப் சர்மா நோ-பால் வீசியதை கிண்டல் செய்து வரும் ரசிகர்கள், ஐதராபாத் அணியின் மார்க்கோ யான்சனையும் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் கிரீஸில் இருந்து கால்களை ஒரு இன்ச் தள்ளி வைத்ததால், சந்தீப் சர்மா மீண்டும் பந்துவீச அறிவுறுத்தப்பட்டார். ஆனால் மார்க்கோ யான்சன், சில அடி தூரம் கிரீஸில் இருந்து வெளியேறி நிற்கிறார்.
ஒவ்வொரு பந்திற்கும் பந்துவீச்சாளர்களின் கால்களை கண்காணிக்கும் நடுவர்கள், விதிகளை மீறி கிரீஸில் இருந்து எல்லை தாண்டும் பேட்ஸ்மேன்களை கண்காணிக்காமல் இருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பந்துவீச்சாளர்கள் கிரீஸில் இருந்து எல்லை தாண்டினால், நோ-பால் என்று தீர்ப்பளித்து மீண்டும் பந்துவீச வைக்கப்படுவதை போல், பேட்ஸ்மேன்கள் கிரீஸ் இருந்து வெளியேறினால் 2 ரன்கள் முதல் 5 ரன்கள் வரை கழிக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.