பெங்களூரு: பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மிரள வைக்கும் மீம்ஸை பார்க்கலாம்.

ஐபிஎல் வரலாற்றிலேயே சின்னசாமி மைதானத்தில் தான் அதிக சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளது. எந்த அணி ஆடினாலும் எளிதாக 200 ரன்களை கடந்துவிடலாம். அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களின் சொர்க்க பூமியான சின்னசாமி மைதானத்திலேயே கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனி ஒருவன் படத்தில் தம்பி ராமையா, "இப்படி உன்னைய பாக்குறதுக்கு போலீஸ் பாதுகாப்போட வர வெச்சுட்டியேயா" என்று வசனம் பேசுவார். அதனை அப்படியே மாற்றி கொல்கத்தா ரசிகர்கள் பேசுவது போல், "சின்னசாமில ஏன்யா இப்படி ஒரு ஆட்டமா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சார்பாக சேர்க்கப்பட்ட 78.6 சதவிகித ரன்கள் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளஸிஸ் ஆகியோரால் சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் வெறும் 21.4 சதவிகித ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இதனை திருச்சிற்றம்பலம் படத்தில் ப்ரியா பவானி சங்கர், தனுஷ் இருவரையும் பேச சொல்லிவிட்டு, "நீங்க பேசுங்க.. நான் அங்க தனியா வெய்ட் பன்றேன்" என்று நித்யா மேனன் செல்வார். அதனை அப்படியே மாற்றி மேக்ஸ்வெல், கோலி மற்றும் டூ பிளஸிஸ் ஆகியோரிடம், "நீங்க மூனு பேரும் ஆடிட்டு இருங்க.. நாங்க பெவிலியன்ல வெய்ட் பன்றோம்" என்று ஆர்சிபி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க ரகம்.

நேற்றையப் போட்டியில் விராட் கோலி அரைசதம் விளாசியதன் மூலம் சின்னசாமி மைதானத்தில் மட்டும் டி20யில் 3 ஆயிரம் ரன்களை சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதனை காலா படத்தில் ரஜினி, "இது காலா கில்லா.. என்னுடைய கோட்டை" வசனத்துடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

ஆர்சிபி அணிக்கு எதிராக கேகேஆர் அணியின் ரஸ்ஸல் ஏராளமான அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் நேற்றையப் போட்டியில் பேட்டிங்கில் அல்லாமல் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அதனை வீரம் படத்தில் வரும் அஜித், வில்லனை மிரட்டும் காட்சியில், வணக்கம் வைத்து "என்ன தங்கம் செளக்கியமா" என்று தொடங்குவார். அதுபோல் நேற்றையப் போட்டியில் ரஸ்ஸல் வணக்கம் வைப்பது போல் செய்த புகைப்படத்தை பதிவிட்டு, "என்ன தங்கம் செளக்கியமா" என்று ஆர்சிபி அணியை பார்த்து கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் தெறி.

நேற்றைய போட்டியுடன் ஐபிஎல் தொடரின் 2ம் கட்ட போட்டிகள் தொடங்கின. வழக்கமாக ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் ஆர்சிபி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதனை கிண்டல் செய்யும் வகையில், குருவி படத்தில் விஜயை புகழ விவேக், "ஆஹா.. வேலு வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டானே" என்று வசனம் பேசுவார். அதனை மாற்றி கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியோடு ஒப்பிட்டு, "ஆஹா வேலு 2ம் கட்ட ஐபிஎல்-ல ஸ்டார்ட் பண்ணிட்டானே" என்று ஆர்சிபி ரசிகர்கள் புலம்புவது போல் உருவாக்கப்பட்ட மீம் ரசிகர்களின் குமுறல்.