மொஹாலி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ரானா பந்துவீசி வருகிறார். இந்த நிலையில், கேகேஆர் அணியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார் வீரராக இருந்த தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு பிளேயிங் லெவனிலே இடம் கிடைக்கவில்லை.
2021ஆம் ஆண்டு கேகேஆர் அணி இறுதிப் போட்டி வரை வந்ததற்கு வெங்கடேஷ் ஐயர் தான் காரணமாக இருந்தார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 370 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணியில் கூட வெங்கடேஷ் ஐயருக்கு இடம் கிடைத்தது.

ஆனால், அதன் பிறகு காயம், பார்ம் அவுட் போன்ற காரணத்தால் வெங்கடேஷ் ஐயர் தனது இடத்தை இந்திய அணியில் இழந்தார். இதே போன்று 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் வெங்கடேஷ் ஐயர் 12 ஆட்டங்களில் விளையாடி 182 ரன்கள் மட்டுமே சேர்த்தார்
இந்த நிலையில், கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை தக்க வைத்து கொண்டாலும், இந்த சீசனில் அவருக்கு பிளேயிங் லெவனில் கூட வாய்ப்பு இல்லை. இதனால் இவருக்கா இந்த நிலைமை என்று தமிழக ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். வெங்கடேஷ் ஐயர் இன்றைய ஆட்டத்தில் இம்பாக்ட் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

போட்டியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்காததால் பிளேயிங் லெவனில் கூட இடம் கொடுக்கவில்லை.
இந்த சீசனில் வெங்கடேஷ் ஐயர் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு கேகேஆர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.