பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக விராட் கோலி, டுபிளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.
இதில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதால், விராட் கோலி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினார். நோக்கியா வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி 2 பவுண்டரிகளை அடித்தார்.

இதனையடுத்து கோலியை கட்டுப்படுத்த அக்சர் பட்டேலை 2 வது ஓவரிலேயே வார்னர் பயன்படுத்தினார். இதில் 5 ரன்கள் மட்டுமே சென்றது. இதனைத் தொடர்ந்து சுழற்பந்துவீச்சாளர் வந்ததால் டுபிளஸிஸ் இடம் ஸ்ட்ரைக் கொடுத்துவிட்டு விராட் கோலி வேகப்பந்துவீச்சில் பட்டையை கிளப்பினார்.
இதனால் கோலி 33 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்த நிலையில் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் விராட் கோலி 3 சாதனைகளை படைத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் கோலி 2220 ரன்கள் அடித்ததன் மூலம் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

இதே போன்று ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலி 11 ஆயிரத்து 500 ரன்கள் அடித்து மற்றொரு சாதனை படைத்துள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் மட்டும் 6819 ரன்கள் அடங்கும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டும் கோலி 2510 ரன்களை அடித்துள்ளார். இதே போன்று டெல்லி அணிக்கு எதிராக கோலி 9 முறை அரைசதமும், ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தையும் கோலி பெற்றுள்ளார்.