லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்ற நிலையில், விராட் கோலி - கவுதம் கம்பீர் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் லக்னோ மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பின் லக்னோ அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர். லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆர்சிபி ரசிகர்கள் பார்த்து, வாயில் விரலை வைத்து "சத்தம் வரக்கூடாது" என்று செய்கை செய்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஆர்சிபி வீரர்கள் மத்தியிலும் கோபத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில் இன்று லக்னோ மைதானத்தில் லக்னோ - பெங்களூரு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணி குறைந்த இலக்கை நிர்ணயித்த போதும் 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி பந்துவீச்சை தொடங்கிய நொடி முதலே விராட் கோலி வழக்கத்தை விடவும் அதிக ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார்.
க்ருனால் பாண்டியா கொடுத்த கேட்ச்சை பிடித்த பின் விராட் கோலி லக்னோ மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து சத்தம் வரக்கூடாது என்று சொல்லி கம்பீருக்கு பதிலடி கொடுத்தார். அதன்பின்னர் ஒவ்வொரு விக்கெட்டின் போதும் விராட் கோலியின் ஆக்ரோஷம் பன்மடங்கு அதிகரித்தது. வீரர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்புவது, ரசிகர்களிடம் உற்சாகம் போதவில்லை என்று கூறுவது, கரகோஷத்தை உயர்த்துமாறு செய்கை செய்து தனி வீரனாக மாஸ் காட்டிக் கொண்டிருந்தார் விராட் கோலி.

ஒரு கட்டத்தில் விராட் கோலி ஆக்ரோஷத்தால் கடுப்பான அமித் மிஸ்ரா ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடன் இருக்கிறாய் என்று கேட்க, நேரடியாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் வெற்றியடைந்த பின் நவீன் உல் ஹக்கையும் வம்புக்கு இழுத்து விராட் கோலி பதிலடி கொடுத்தார். இறுதியாக லக்னோ அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் - விராட் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கேப்டன் டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல், கேஎல் ராகுல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் சுற்றி இருக்கும் போதே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கம்பீர் விலகி செல்ல, விராட் கோலியை கட்டுப்படுத்த முடியாமல் அனைவரும் திணறி போயினர். பின்னர் லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் விராட் கோலியிடம் ஏதோ பேச, அவரை வந்து கம்பீர் அழைத்து சென்றார். இதனால் லக்னோ மைதானமே பரபரப்பாகியது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.