ஜெய்ப்பூர் : ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ராஜஸ்தான், லக்னோ அணிகள் தங்களுக்குள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் களம் இறங்குகிறது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குவதால், ராஜஸ்தான் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சஞ்சு சாம்சன் கூறினார்.
ஆனால் பார்ப்பதற்கு ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் போல் தெரிகிறது. மேலும் பேசிய அவர், நாங்கள் பயம் இன்றி விளையாடுகிறோம். நெருக்கடியான கட்டத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொருத்தே வெற்றி இருக்கிறது என்று கூறினார்.

இன்றைய ஆட்டத்தில் சாம்பாவுக்கு பதில் ஜேசன் ஹோல்டரை சேர்த்துள்ளோம் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தாங்களும் பந்துவீச்சு செய்ய தான் முடிவு எடுத்தோம். தற்போது முதலில் பேட்டிங் செய்வதால், நல்ல தொடக்கத்தை கொடுத்து ரன் குவிக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் 4 வெளிநாட்டு வீரர்கள் தான் விளையாட முடியும். இதனால் டி காக் போன்ற வீரர் பெஞ்சில் அமர்ந்திருப்பது கொஞ்சம் ஏமாற்றமான விசயம் தான். களத்தில் இடதுகை, வலது கை பேட்ஸ்மேன் இருப்பது போல் நாங்கள் பார்த்து கொள்கிறோம். இதுவரை பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என மூன்றிலும் நன்றாக செயல்பட்டு வருகிறோம் என்று கேஎல் ராகுல் கூறினார்.