கொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்தும் மோசமாக செய்ததாக கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா - குஜராத் அணி மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை விளாசினார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒரு கட்டத்தில் கடைசி ஓவர் வரை ஆட்டம் செல்லும் என்று பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சங்கரின் அதிரடியான ஆட்டத்தால் 18வது ஓவரிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். அதேபோல் கொல்கத்தா அணி 5வது தோல்வியை அடைந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேசுகையில், பேட்டிங்கின் போது 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளோம். அதேபோல் குஜராத் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக சாதாரண கேட்ச்களை தவறவிட்டால், முடிவில் தோல்வி தான் கிடைக்கும். குர்பாஸ் மற்றும் ரஸ்ஸலை தவிர்த்து எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும் படியாக பேட்டிங் செய்யவில்லை. சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. குஜராத் அணிக்கு கூடுதல் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டும்.
எங்களின் பந்துவீச்சில் மிடில் ஓவர்கள் சிறப்பாக அமைந்தது. ஆனால் கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டோம். அப்படி செய்தால், தோல்வி மட்டுமே கிடைக்கும். எங்களின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று மூன்றிலும் சொதப்பி இருக்கிறோம். இந்த மூன்றிலும் சிறப்பாக செயல்படும் வரை, எங்களுக்கு வெற்றி கிடைக்கப் போவதில்லை. கிரிக்கெட்டில் சிறு சிறு விஷயமும் முக்கியமானது. சிறிய விஷயங்களை சரியாக செய்தால் மட்டுமே, வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்று தெரிவித்தார்.