சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி களமிறங்கிய போது, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் 100 டெசிபிள் அளவுக்கு உயர்ந்ததால், ரசிகரின் கைகளில் கட்டப்பட்டிருந்த ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்னும் இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதியாகும் என்பதோடு, முதல் இரு இடங்களை பிடிக்கும் வாய்ப்பும் சென்னை அணிக்கு கிடைக்கும்.

இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி களமிறங்கிய போது, மரண மாஸ் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கம் போல் பேட்டிங் செய்வதற்காக எம்எஸ் தோனி களமிறங்கிய போது, ரசிகர்களின் கரகோஷம் விண்ணை எட்டியுள்ளது. அந்த கரகோஷத்தின் சத்தம் எவ்வளவு என்பது ரசிகர் ஒருவரின் ஸ்மார்ட்போன் வந்த எச்சரிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
தல தோனி களமிறங்கிய போது, ரசிகர்களின் கரகோஷம் 100 டெசிபிள் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சத்தத்தை சில நிமிடங்கள் காதால் கேட்டால் கூட தற்காலிக காது கேளாமை பிரச்சனை வரும் என்றும் ஸ்மார்ட்வாட்ச் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் நிரந்தர ராஜா தோனி தான் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த போட்டியில் தோனி களமிறங்கிய போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச், எம்எஸ் தோனி மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது வரும் உற்சாகம் எங்குமே கண்டதில்லை. நீங்கள் கிரிக்கெட் ரசிகர் என்றால், தோனி களத்திற்கு வருவதை ஒருமுறையாவது நேரில் சென்று பார்த்துவிடுங்கள். தவறவிடக் கூடாத பேரனுபவம் அது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.