மும்பை : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து விட்டது. களமிறங்கிய 10 அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள். சில அணி இரண்டு போட்டிகளில் விளையாடிவிட்டது. இதனால் தற்போது ரசிகர்களுக்கு
எந்த அணி பலமாக இருக்கிறது எந்த அணி பலவீனமாக இருக்கிறது என்பது குறித்து தெரிந்திருக்கும்.
தற்போதைய நிலவரப்படி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எந்த அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது எந்த அணி தங்களது பலத்தை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். கடந்த மார்ச் 31ம் தேதி ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் தொடங்கின. தற்போது வரை எட்டு ஆட்டங்கள் நடந்துள்ளன.
குஜராத், பஞ்சாப்
இதில் கடந்த சீசனை போல் இந்த சீசனிலும் குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்றிலும் பலமாக உள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி தற்போது பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. பஞ்சாப்பும் களமிறங்கிய இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக தெரிந்தாலும் பேட்டிங்கில் யாருமே எதிர்பார்க்காத படி அதிரடியாக விளையாடுகிறார்கள்.

ராஜஸ்தான், ஆர்சிபி
இதே போன்று ராஜஸ்தான் அணி ஒரு ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும், அவருடைய பேட்டிங் அசுரத்தனமாக இருக்கிறது. ராஜஸ்தான் அணியில் நடுவரிசையில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. அதனை அவர்கள் சரி செய்து கொண்டால் நிச்சயம் பிளே ஆப்க்கு சென்று விடலாம். இதேபோன்று பெங்களூரு அணியும் கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் அவர்கள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே, லக்னோ
பலம் வாய்ந்த மும்பை அணியை எளிதாக ஆர் சி பி வீழ்த்தியது பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் ஆர்சிபி அதிரடியாக இருக்கிறது. லக்னோ அணியை பொறுத்தவரை அதிரடி வீரர்கள் நிறைந்திருந்தாலும் சில தவறுகளை செய்ததால் சிஎஸ்கே விடம் தோற்றுப் போனார்கள். இதனால் லக்னோ அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பேட்டிங் பலமாக இருக்கிறது. எனினும் வேகப்பந்து வீச்சில் அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் திரும்பினால் அந்த குறையை சிஎஸ்கே சரி செய்து விடும் என எதிர்பார்க்கலாம்.

டெல்லி, கொல்கத்தா
தற்போது பிரச்சனைக்கு உள்ள அணியாக டெல்லி உள்ளது. விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை தழுவி இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அவர்கள் இன்னும் சரியான அணியை கட்டமைக்கவில்லை. உடனடியாக அவர்கள் திருத்திக் கொண்டால் இந்த சீசனில் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் மற்ற அணிகளுக்கு அடிமையாக மாற நேரிடும். இதே போன்று கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய குறை இருக்கிறது. தற்போது ஜேசன் ராயை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால் கொல்கத்தா அணியின் நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத், மும்பை
அதே போன்று ஹைதராபாத் அணியின் பேட்டிங் பந்துவீச்சு மோசமான அளவில் இருக்கிறது. எனினும் அந்த அணியின் தென்னாப்பிரிக்க வீரர்கள் திரும்பி உள்ளதால் அந்த அணி நிலைமையும் மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் வரிசை வீரர்கள் இன்னும் ஃபார்முக்கு திரும்பாதது ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தும் அந்த அணி 171-ரன்கள் குவித்ததில் இருந்தே அவர்களுடைய பலத்தை நாம் தெரிந்து இருக்கலாம். இதேபோன்று பந்துவீச்சிலும் அவர்கள் கொஞ்சம் முன்னேற்றம் அடைய தேவை இருக்கிறது.
