கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் கே கே ஆர் அணிக்காக விளையாடிய சுயாஷ் சர்மா என்ற பந்துவீச்சாளர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு காரணம் சுயாஷ் சர்மா என்ற ஒரு வீரர் குறித்து எந்த ஒரு ரெக்காடும் இதுவரை இல்லை. அவர் இதுவரை எந்த ஒரு பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
இதனால் அவர் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு வீரரை திடீரென்று இன்று கேகேஆர் அணி இம்பேக்ட் வீரராக களம் இறக்கியது. முடியை தோனி போல் நீளமாக வைத்திருக்கும் சுயாஷ் ஷர்மா வெறும் 19 வயது வீரர்தான் என்றால் யாராலும் நம்ப முடியவில்லை.

லெக் பிரேக் பந்து வகை வீசும் அவர் ஆர்.சி.பி அணியின் பேட்டிங் வரிசையை திணறடித்தார். நான்கு ஓவர்களை வீசிய சுயாஷ் சர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுயாஷ் ஷர்மாவின் பந்து வீச்சும் வித்தியாசமாக இருப்பதால் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக ஆர் சி பி அணி வீரர்களுக்கு இருந்தது.
இதேபோன்று தமிழக வீரர் வருண் சக்கிரவர்த்தியும் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டார். மூன்று புள்ளி நான்கு ஓவர் வீசிய அவர் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுயாஷ் ஷர்மா யார் என்று ரசிகர்கள் தேடி வருகிறார்கள். சுயாஷ் ஷர்மாவை வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு தான் ஆர்சிபி அணி வாங்கி இருக்கிறது. சுயாஷ் சர்மா டெல்லியை சேர்ந்தவர். இவரை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கே கே ஆர் அணியின் பயிற்சியாளரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் நாடு முழுவதும் திறமையான வீரர்களை தேர்வு செய்ய நாங்கள் பல முகாம்களை நடத்தினோம். அதில் சுயாஷ் ஷர்மாவை நாங்கள் பார்த்தோம். அவர் பந்தை வேகமாக வித்தியாசமாக வீசுகிறார். இதனால் பேட்ஸ்மேன்கள் அவர் பந்தை கணிக்க சிரமப்படுவார்கள். ஆனால் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. எனினும் தன்னுடைய முயற்சியால் இன்று சாதித்து இருக்கிறார் என்று சந்திரகாந்த் பண்டிட் பாராட்டியுள்ளார்.