சென்னை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் கேப்டன்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எம்எஸ் தோனியின் கேப்டன்சி தலைவனுக்குரிய பண்புகளோடு கேப்டன்சி செய்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று 10வது முறையாக ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ஒரு காரணம் என்றால், அவர்களை சரியாக பயன்படுத்தியதும், ஒவ்வொரு ஓவருக்கு ஏற்றாற்போல் ஃபீல்டிங்கை மாற்றிய கேப்டன் தோனியும் மற்றொரு காரணம்.

நேற்றையப் போட்டி முடிவடைந்த பின் தோனி பேசுகையில், நான் ஒரு எரிச்சலடைய வைக்கும் கேப்டனாக இருக்கலாம். ஏனென்றால் ஃபீல்டிங்கை எப்போதும் என் உள்ளுணர்வின் அடிப்படையில் மாற்றிக் கொண்டே இருப்பேன். அதனால் வீரர்களை எப்போதும் என்னை பார்க்குமாறு கேட்டுக் கொள்வேன் என்று தெரிவித்தார். எந்தவொரு போட்டிக்கும் முன் திட்டமிடுதலோடு சேர்த்து களத்தில் ஏற்படும் மாற்றங்களுக்காக புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அப்படி உருவாக்குபவர்களே கேப்டன் என்ற பெயரில் இருந்து தலைவன் என்ற ஸ்தானத்தில் கொண்டாடப்படுகிறார்கள். ஒவ்வொரு ஓவரையும் கூர்ந்து கவனித்து உடனடி முடிவுகளை எடுப்பதால் தான் தோனி வீரர்களால் தலைவனாக கொண்டாடப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் சஹர் எந்த லெந்தில் வீச வேண்டும் என்று குழப்பமடையும் போது, நேரடியாக வந்து உதவி செய்வது, ஃபீல்டிங்கில் சொதப்பிய சேனாபதியை எந்த இடத்திலும் கோபித்துக் கொள்ளாமல், அமைதியாக இருக்க அறிவுறுத்தியது என்று தோனி களத்தில் ஏற்படும் தவறுகளையும் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்கிறார்.
அதேபோல் முதல் சில போட்டிகளில் மோசமாக செயல்பட்ட துஷார் தேஷ்பாண்டேவை பேக் செய்தது, அவருக்கு நம்பிக்கை அளிப்பதற்காக செய்தியாளர்களை சந்திக்க வைத்தது, எந்தவொரு வீரரையும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படாமல் வைத்துக் கொள்வது என்று தோனி தனக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஸ்டைலில் கேப்டன்சியை செய்வதும் ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவதற்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளது. இங்குதான் தோனி கேப்டன் என்ற ஸ்தானத்தில் இருந்து தலைவன் என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்துள்ளார்.