ஜெய்ப்பூர்: குஜராத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும், தோல்வியடைந்தால் 6வது இடத்திற்கும் ராஜஸ்தான் அணி தள்ளப்படும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடம் உள்ளது. இருப்பினும் கடைசி 4 ஆட்டங்களில் 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக முந்தைய மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அதிர்ச்சி தோல்வியை அடைந்தது.

அதேபோல் முதல் 4 போட்டிகளில் 3 அரைசதம் விளாசிய பட்லர், கடைசி 5 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் சஞ்சு சாம்சனும் சமீபத்திய ஆட்டங்களில் பெரியளவில் ஜொலிக்கவில்லை. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் ஹோல்டர் இறுதி ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்குவதும், சாஹல் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறுவதும் ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் கடந்த ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 130 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 5 ரன் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் தயாராகி வரும் குஜராத் அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. ஆனால் ராஜஸ்தானும் அவர்களுக்கு நிகரான அணி என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த முறை ராஜஸ்தான் அணி குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனால் தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி தயாராக இருக்கும்.
அதேபோல் உள்ளூரில் களமிறங்குவதால் அதிக நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். இல்லையென்றால் பஞ்சாப் அணிக்கு முன் 6வது இடத்திற்கு தள்ளப்படும். இதனால் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கும் சிக்கல் அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.