பெங்களூரு : ஐபிஎல் தொடரில் தென்னகத்தின் இரண்டு மிகப் பெரிய அணிகளாக கருதப்படும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. விளையாடிய 4 போட்டியில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி அடைந்து இரு அணிகளும் புள்ளி பட்டியலில் முறையே சிஎஸ்கே 6வது இடத்திலும், பெங்களூரு 7வது இடத்திலும் உள்ளது.
இதனால் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆர்சிபி அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்சிபி அணி தங்களுடைய ஃபார்மை சரியான நேரத்தில் கண்டெடுத்து விட்டது.

முகமது சிராஜ், விஜயகுமார் விஷ்யாக், ஹர்சல் பட்டேல், கரண் சர்மா, ஹசரங்கா போன்ற பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே அணிக்கு தலைவலி கொடுப்பார்கள். ஆனால் சிஎஸ்கே பக்கத்தை பார்த்தால், சிசாண்டா மகாலா, தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லை.
இதனால் சிஎஸ்கே அணி தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் அல்லது குட்டி மலிங்காவான பதிரத்னாவை பெங்களூருக்கு எதிரான போட்டியில் களமிறக்க கூடும். இதே போன்று ஆகாஷ் சிங்கும் முதல் போட்டியிலும் நன்றாகவே செயல்பட்டார், அவரும் பிளேயிங் லெவனில் இருப்பார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, முதல் ஆட்டத்தில் சொதப்பிய மகீண் தீக்சனாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
கடைசியாக பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். ஆனால் அதே ஆடுகளம் தான் இந்த போட்டிக்கும் பயன்படுத்தப்படுமா இல்லை ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுமா என்று தெரியவில்லை. ருதுராஜ், மோயின் அலி, சிவம் துபே போன்ற முக்கிய வீரர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப முடியும்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் - 1. ருதுராஜ், 2, கான்வே, 3, ரஹானே, 4, மோயின் அலி, 5, அம்பத்தி ராயுடு, 6, சிவம் துபே, 7, ஜடேஜா, 8, தோனி, 9, தீக்சனா, 10, பிரிட்டோரியஸ் / பதிரத்னா, 11, தேஷ்பாண்டே இம்பேக்ட் வீரர்கள் - ஹங்கர்கேகர், ஆகாஷ் சிங்