டெல்லி : ஐபிஎல் தொடரில் டெல்லி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக கருதப்படுகிறது. காரணம் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற வேண்டும் என்றால் நாளை ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டும்.
இல்லையெனில் மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் ஆகியோர் நல்ல அடித்தளத்தை கொடுத்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியும்.

இதேபோன்று மோயின் அலி, ரகானே ஆகியோர் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். சிஎஸ்கே அணியில் பந்து வீச்சாளர்களில் பதிரானா ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், மற்ற வீரர்கள் தீபக்சாகர் துஷர் தேஷ் பாண்டே ஆகியோர் துல்லியமாக வீச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நாளைய ஆட்டத்திலாவது சிஎஸ்கே அணியில்கேப்டன் தோனி ஏதேனும் மாற்றத்தை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீசனில் இலங்கை வீரர் தீக்ஷனா தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதனால் அவருக்கு பதில் மிட்செல் சாண்ட்னரை தோனி சேர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்படி ஒரு முக்கியமான கட்டத்தில் தோனி எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய மாட்டார் என்பதே வரலாறு.
சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் டெல்லி ஆடுகளம் மிகவும் சிறியது. இங்கு டேவிட் வார்னர், அக்சர் பட்டேல், சால்ட் ,பிரித்விஷா ஆகியோர் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் சிஎஸ்கே அணிக்கு நாளைய ஆட்டம் நிச்சயமாக கடும் நெருக்கடியை கொடுக்கும்.

நாளை ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். டெல்லி அணி தங்களது சொந்த மண்ணில் நடப்பு சீசனில் ஆறு போட்டியில் விளையாடி வெறும் இரண்டு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. ஆனால் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் டெல்லி வென்றிருக்கிறார்கள். நாளைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைக்கும்.