லக்னோ: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பின் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி - லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் இந்த நொடி வரை இந்தியா முழுவதும் இதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

யார் செய்தது தவறு என்று முழுமையாக கண்டறிய முடியாததால், விராட் கோலிக்கு ஆதரவாக ஏராளமான ரசிகர்களும், கவுதம் கம்பீருக்கு ஆதரவாக ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விராட் கோலியுடனான மோதலுக்கு பின் நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமெண்ட் செக்ஷனை அணைத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே விராட் கோலி - கவுதம் கம்பீர் மோதலின் போது என்ன பேசினார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பிரபல நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா விராட் கோலி - கம்பீர் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலியை பார்த்து கவுதம் கம்பீர், நீ என்ன சொன்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விராட் கோலி, உங்களை ஏதும் சொல்லாத போது, நீங்கள் ஏன் தேவையில்லாமல் நடுவில் வருகிறீர்கள்? என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு கவுதம் கம்பீர், "நீ என் அணி வீரர்களை திட்டி அவமானம் செய்து இருக்கிறாய்.. என் வீரரை திட்டி அவமானம் செய்வது என் குடும்பத்தை அவமானம் செய்வது போல்" என்று பதில் அளித்திருக்கிறார். அதற்கு விராட் கோலி, "அப்போ, உன் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்" என்று பதிலடி கொடுத்துள்ளார். கடைசியாக பிரிந்து செல்லும் போது விராட் கோலியிடம் கவுதம் கம்பீர், "இப்போது உன்னிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இவரது வார்த்தை மோதல்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.