மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரரான ஷமார் ஜோசப்பை ஒப்பந்தம் செய்வதற்காக மூன்று ஐபிஎல் அணிகள் தீவிரமாக இருப்பதாக பிரபல அனாலிஸ்ட் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதற்கு காரணமாக அமைந்தவர் ஷமார் ஜோசப். தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசிய அவர், 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க பெற்று கொடுத்துள்ளார் ஷமார் ஜோசப். இந்த நிலையில் வெறித்தன வேகத்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் வீசும் திறன் கொண்ட ஷமார் ஜோசப்பை ஒப்பந்தம் செய்ய பல்வேறு ஐபிஎல் அணிகளும் ஆர்வம் காட்டி வந்தன. ஆனால் ஐபிஎல் ஏலத்தின் போது ஷமார் ஜோசப் அடிப்படை விலைக்கே யாரும் ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை.
இதனிடையே ஷமார் ஜோசப்பின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் பிரபல அனாலிஸ்ட்டான பிரசன்னா. சிபிஎல் தொடரில் கயானா அமேசான் அணியின் அனாலிஸ்ட்டாக பணியாற்றிய போது, ஷமார் ஜோசப்பை அடையாளம் கண்டு ஒப்பந்தம் செய்தவர் தான் தமிழரான பிரசன்னா. இவர் தென்னாப்பிரிக்கா அணி, ஆர்சிபி, புனே உள்ளிட்ட அணிகளின் அனாலிஸ்ட்டாக பணியாற்றியவர்.
ஷமார் ஜோசப் எழுச்சியையடுத்து பிரசன்னாவிற்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், 3 ஐபிஎல் அணிகள் என்னை அணுகி ஷமார் ஜோசப்பின் மேனேஜர் தொடர்பு எண்ணை கோரி இருக்கிறார்கள். இந்த 3 அணிகளுக்கும் ஐபிஎல் ஏலத்தின் போது ஷமார் ஜோசப்பை ஏலத்தில் வாங்குமாறு அட்வைஸ் செய்தேன். ஆனால் ஒருவர் கூட அவரை அடிப்படை விலைக்கு கூட வாங்கவில்லை. தற்போது எந்த அணியின் ஒப்பந்தத்திற்கு சரி சொல்ல வேண்டும் என்று அட்வைஸ் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஷமார் ஜோசப் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும், ஆர்சிபி அணியின் பிரபல ஐகானிக் வசனமான PLAY BOLD என்றும் பதிவிட்டிருந்தார். இதனால் ஷமார் ஜோசப் ஆர்சிபி அணி சார்பாக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் தேவை இருப்பதால், அவர்களும் ஷமார் ஜோசப்பை வாங்க ஆர்வம் காட்டலாம் என்று தெரிகிறது.