சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி யுடன் பலபரிட்சை நடத்துகிறது. சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி சீசன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கோப்பையுடன் தோனியை வழி அனுப்ப வேண்டும் என சிஎஸ்கே வீரர்கள் உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்குகிறார்கள். இந்த தொடரில் சிஎஸ்கே மீண்டும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் சிஎஸ்கே அணி பலம் மிகுந்த அணியாக காணப்படுகிறது. இதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியில் இருந்த பிரச்சனையே அனுபவம் மிக்க இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததுதான். கடந்த முறை தீபக் சாகர் மட்டும்தான் இருந்தார். அவரும் சில போட்டிகளில் விளையாடவில்லை.
ஆனால் தற்போது தீபக்சாகர் மற்றும் சர்துல் தாக்கூர் என இரண்டு அனுபவமிக்க இந்திய பவுலர்கள் சிஎஸ்கேவுக்கு திரும்பி இருக்கிறார்கள். மேலும் இருவருமே நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் சிஎஸ்கே அணியில் 10 வீரர்கள் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். இதேபோன்று சிஎஸ்கே அணியில் இம்முறை பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.
20 வயதான சமீர் ரிஸ்வி, சாயிக் ரசித், ராஜவர்தன் ஹங்கேர்கர், நிஷாந்த் சித்து போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இது சிஎஸ்கே அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியில் மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் புதிதாக இணைந்து இருக்கிறார்கள். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவிந்த்ரா மற்றும் டாரல் மிட்செல் ஆகியோர். இருவருமே இந்திய மண்ணில் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.
சுழற் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டு ரன் சேர்ப்பார்கள். இவர்களுடைய வருகை சென்னை அணியின் பலத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. நான்காவது காரணம் நம் அனைவருக்கும் தெரிந்தது. தோனியின் கேப்டன்சியில் தான் களத்தில் யுக்திகளை அமைத்து எந்த வீரரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் நன்கு அறிந்தவராக இருக்கும் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் கோட்டையாகவே மாற்றி வைத்திருக்கிறார். இது தன்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்பதால் தோனி உயிரைக் கொடுத்து விளையாடுவார் என்பதில் சந்தேகமே இல்லை. இதனால் இம்முறையும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.