பெங்களூரு: ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர வீரர்கள் அல்லாமல் பெங்களூரு மைதானத்திற்கு ஏற்ப சாதாரண வீரர்களை வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக ரசிகர்கள் முன்னிலையில் பெண் ஏல நிர்வாகியான மல்லிகா சாகர் ஐபிஎல் ஏலத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இதுவரை ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

அதேபோல் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய வீரர்களில் ஹர்சல் படேல் ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கு சிஎஸ்கே அணியாலும் வாங்கப்பட்டுள்ளார். இதேபோல் பல்வேறு வீரர்கள் 10 அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த மினி ஏலத்தில் ஆர்சிபி அணி மட்டுமே அமைதியாக மிக்சர் சாப்பிட்டு வருகிறது. ரூ.23.25 கோடி கையிருப்பில் வைத்து கொண்டு ஆர்சிபி அணி இதுவரை 2 வீரர்களை மட்டுமே வாங்கியுள்ளது. அதில் அல்சாரி ஜோசப் ரூ. 11.50 கோடிக்கும், கடந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்கால் பொளக்கப்பட்ட யாஷ் தயாளை ரூ.5 கோடிக்கும் வாங்கியுள்ளது.
அதேபோல் டாம் கரணை ரூ.1.5 கோடிக்கும் வாங்கியுள்ளது. வழக்கமாக பெரிய வீரர்களை நம்பி பெரிய தொகை கொடுத்து வாங்கும் வழக்கம் கொண்ட ஆர்சிபி அணி, இம்முறை பெங்களூரு மைதானத்திற்கு ஏற்ப பந்துவீசும் வீரர்களை வாங்கியுள்ளது. அந்த அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்டி பிளவர் சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்று கொண்டார்.
அவரின் அணுகுமுறைக்கு ஏற்ப ஆர்சிபி அணி செயல்பட்டு வருகிறது. ஆண்டி பிளவர் எப்போதும் கொஞ்சம் அதிக உயரம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்களை விரும்புவார். அதேபோல் ஜோசப் மற்றும் யாஷ் தயாள் இருவருமே நல்ல உயரம் கொண்டவர்கள். அதேபோல் அதிக வேகத்தில் வீசக் கூடியவர்கள். இதனால் ஆர்சிபி அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.