பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று மீண்டும் ஒருமுறை கோப்பை வெல்லாமல் வெளியேறியது. அது மட்டுமல்லாமல் லீக் சுற்றில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து விட்டு ஆர்சிபி ரசிகர்களும் வீரர்களும் செய்த கலாட்டா ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் முகத்தையும் சுளிக்க வைத்தது.
மேலும் ரசிகர்கள் தற்போது அனைவரும் ஆர்சிபிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். சிஎஸ்கேவை தோற்கடித்து ஆர்சிபி செய்த ரகளைக்கு பதில் அளிக்கும் விதமாக ஆர்.சி.பி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானுடன் தோற்றத்தை அடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவும் ஆர்சிபிக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் ஆர் சி பி ரசிகர்கள் மற்றும் கோலி ரசிகர்கள், ராயுடுவை கடுமையாக திட்டி வருகிறார்கள். விராட் கோலியின் சாதனைகளுடன் ராயுடுவை ஒப்பிட்டு கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அம்பத்தி ராயுடு சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆர்சிபி ஆதரவாளர்கள் தங்களுடைய அணிக்கு பல ஆண்டுகளாக வெறித்தனமாக ஆதரவளித்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இரக்கத்தை மட்டுமே காண்பிக்க முடியும்.
கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி உங்களுக்கு இருப்பது போல் அணி நிர்வாகத்திற்கும் அணியை வழிநடத்துபவர்களுக்கும் இருந்திருந்தால் நிச்சயம் ஆர் சி பி அணி வெற்றி பெற்றிருக்கும் ஆனால் ஆர் சி பி அணியில் உள்ள வீரர்களின் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே முக்கியமாக தெரிகிறது.
இது எல்லாம் சரியாக செய்திருந்தால் ஆர் சி பி இந்நேரம் பல ஐபிஎல் பட்டத்தை வாங்கி இருக்க முடியும். ஆர்சிபி அணியில் இருந்த எத்தனை தலைசிறந்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். தனிப்பட்ட சாதனைகளை விட அணி தான் முக்கியம் என்று நினைக்கும் வீரர்களை மீண்டும் திரும்பிக் கொண்டு வர உங்கள் அணி நிர்வாகத்தை நீங்கள் வற்புறுத்துங்கள்.
வரும் மெகா ஏலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆர் சி பி அணி புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும் என்று ராயுடு கூறியிருக்கிறார். விராட் கோலி போன்ற வீரர்கள் தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுவதாக விமர்சனம் எதுவும் நிலையில் ராயுடு இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.