ஐதராபாத் கேப்டன்சியில் மாற்றம்.. அந்த வீரரை நியமிக்க பேச்சுவார்த்தை? காவ்யா மாறன் எடுத்த முடிவு!
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனால் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியால் ரூ.20.50 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் எவ்வளவு சாதனை செய்திருந்தாலும், ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ் சொல்லி கொள்ளும்படி எதுவும் செய்ததில்லை.

இதனால் ஐதராபாத் அணி ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கும் அளவிற்கான தேவை என்ன என்பது பலருக்கும் புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேற முடியாமல் உள்ளது. இதனால் டேவிட் வார்னர், வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்களை கைவிட்டு தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமை ஐதராபாத் அணி கேப்டனாக நியமனம் செய்தது.
ஏனென்றால் எஸ்ஏடி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது. இதனால் ஐதராபாத் அணிக்கும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் முடிவு அந்த அணி நிர்வாகம் எதிர்பார்த்தை போல் அமையவில்லை. இதன் காரணமாக உடனடியாக ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக உள்ள டேனியல் விட்டோரியை ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது.
அதன்பின் கம்மின்ஸை ரூ.20.50 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்கப்படுவதற்கு முன்பாக பேட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றவர் பேட் கம்மின்ஸ்.
இதனால் ஐபிஎல் தொடரிலும் அவரை தொடர்வதற்கு ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் விட்டோரி உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எய்டன் மார்க்ரம் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Thursday, December 21, 2023, 14:09 [IST]
Other articles published on Dec 21, 2023


Click it and Unblock the Notifications