அகமதாபாத் : மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கொடுத்த அட்வைஸ் பயனளித்ததாக இளம் வீரர் ஸ்பென்சர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக இளம் வீரர் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரரான ஸ்பென்சர் ஜான்சன், முதல்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஸ்பென்சர் ஜான்சன் வீசிய முதல் பந்திலேயே சிக்சருக்கு பறந்தது. அந்த ஓவரில் மட்டும் 17 ரன்களை ஸ்பென்சர் ஜான்சன் விட்டுக் கொடுத்தார். இதனால் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், 19வது ஓவரை நம்பிக்கை வைத்து ஸ்பென்சர் ஜான்சன் கையில் கொடுத்தார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே திலக் வர்மா சிக்சர் அடித்து தொடங்க, மும்பை அணி எளிதாக வெற்றிபெறும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பென்சர் ஜான்சன் அடுத்த பந்திலேயே திலக் வர்மா விக்கெட்டை கைப்பற்றியதோடு, கடைசி பந்தில் கோட்சியே-வையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக 2 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஸ்பென்சர் ஜான்சன்.

இதன்பின் வெற்றி குறித்து ஸ்பென்சர் ஜான்சன் பேசுகையில், அகமதாபாத் மைதானத்தில் இவ்வளவு ரசிகர்கள் முன் விளையாடி வெற்றிபெறுவது மிகச்சிறந்த உணர்வையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. முதல் ஓவருக்கு பின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா என்னிடம் வந்து அமைதியாக இருக்குமாறு அட்வைஸ் கொடுத்தார். என்னிடம், ஹார்ட் லெந்தில் பவுலிங் செய்ய வேண்டும் என்றும், அதுதான் உதவியளிக்கும் என்றும் தெரிவித்தார். அதன்பின் பதற்றமின்றி என்னால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்தேன்.
எப்போதும் இந்திய ரசிகர்கள் முன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இங்குள்ள ரசிகர்கள் கிரிக்கெட்டை வேறு லெவலில் கொண்டாடுகிறார்கள். இந்த மைதானத்திற்கு வரும் போது சுப்மன் கில் அருகில் அமர்ந்து வந்தேன். அவர் என்னை அமைதிப்படுத்தி கொண்டே வந்தார். போட்டியின் அத்தனை சூழல்களிலும் சுப்மன் கில் பங்கு கொண்டார். மிகச்சிறந்த இளம் கேப்டன் சுப்மன் கில் என்று தெரிவித்துள்ளார்.