மும்பை : 2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் (Decision Review System) கிடையாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதற்கு பதிலாக வேறு ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது பிசிசிஐ. அதற்கு "ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்" (Smart Replay System) என பிசிசிஐ பெயரிட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் அம்பயர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு அம்பயர்கள் மட்டுமே தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்த டிவி அம்பயரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள்.

அதன் அடுத்தகட்டமாக வந்தது தான் டிஆர்எஸ். "ஹாக்ஐ" என்ற நிறுவனம் சிறப்பு கேமராக்கள் மூலம் போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும். குறிப்பாக பேட்ஸ்மேன் நிற்கும் இரண்டு முனைகள் மற்றும் பந்து வீசப்படும் திசை போன்றவற்றை படம் பிடித்து, ஒரு வீரரோ, அம்பயரோ ரிவ்யூ கேட்கும் போது அதை திரையில் ஒளிபரப்புவார்கள். டிவி அம்பயர் அதை பார்த்து தனது முடிவை அறிவிப்பார். இதுவரை இருந்த முறையில் ஹாக்ஐ நிறுவனத்தின் வல்லுனருக்கும், டிவி அம்பயருகும் இடையே போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இயக்குனர் பாலமாக இருப்பார்.
ஆனால், டிஆர்எஸ்-இல் நிறைய தவறுகள், குழப்பங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டு வருவதால் இனி இதுவரை இருந்த முறையை மாற்ற பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது. அதன் படி டிவி அம்பயர் மற்றும் ஹாக்ஐ நிறுவனத்துக்கும் இடையே இனி தொலைக்காட்சியை சேர்ந்த யாரும் இடம் பெற மாட்டார்கள்.
டிவி அம்பயர் அமர்ந்து இருக்கும் அதே அறையில் ஹாக்ஐ நிறுவனத்தின் இரண்டு வல்லுனர்கள் இருப்பார்கள். அம்பயர் என்ன கேட்கிறாரோ அதை அவர்கள் நேரடியாக ஒளிபரப்புவார்கள். இதில் இது வரை இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி எட்டு கேமராக்களை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஹாக்ஐ நிறுவனம் எட்டு அதிவேக கேமராக்களை மைதானத்தில் பொருத்தி போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.
டிவி அம்பயர் கேட்கும் போது அந்த எட்டு கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் திரையில் காணும் வசதியும் இனி கிடைக்கும். அதன் மூலம் டிவி அம்பயர் இனி விரைவாகவும், தெளிவாகவும் தனது முடிவுகளை எடுக்க முடியும். அதே போல, எல்பிடபுள்யூ-வின் போதும் வழக்கமாக அவுட்சைடு லெக் திசையில் பந்து பிட்ச் ஆகி இருந்தால் அதை முன்கூட்டியே ஹாக்ஐ நிறுவன வல்லுநர் கூறி விடுவார். இதன் மூலம், டிவி அம்பயர் அதை மட்டும் திரையில் காட்டி எல்பிடபுள்யூவை மறுக்க முடியும். அதன் மூலம் நேர விரயம் ஆவதை தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.