கொல்கத்தா : கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் உடனான முதல் சந்திப்பு குறித்து கவுதம் கம்பீர் விவரித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை 3வது முறையாக சுனில் நரைன் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2012, 2014 மற்றும் 2024 என்று கேகேஆர் அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் சுனில் நரைன் முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த சில சீசன்களாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரிதாக சுனில் நரைனால் பங்களிப்பு அளிக்க முடியவில்லை.

ஆனாலும் கேகேஆர் அணி சுனில் நரைனை தக்க வைத்து நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் வந்த முதல் சீசனிலேயே சுனில் நரைன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிரட்டியுள்ளார். 2012ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக கவுதம் கம்பீரிடம் எந்த வீரரை வாங்க வேண்டும் என்று கேகேஆர் அணி நிர்வாகம் கேட்டிருந்தது.
அதற்கு கவுதம் கம்பீர், சுனில் நரைனின் பெயரை மட்டுமே எழுதி கொடுத்தார். அதன்பின் கேகேஆர் அணிக்காக மட்டுமே சுனில் நரைன் விளையாடி வருகிறார். சுனில் நரைன் உடனான நட்பு குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், ஐபிஎல் தொடரின் எம்விபி விருதை பெறவில்லை என்றாலும் கேகேஆர் அணியின் எம்விபி வீரர் சுனில் நரைன் தான். அவரின் ஆல்ரவுண்டர் திறமையை இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் பார்ப்போம்.
பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தனது திறமை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளார். இன்னும் அவரிடம் இருந்து கேகேஆர் அணிக்கு கொடுப்பதற்கு ஏராளம் உண்டு. முதல்முறையாக 2012ஆம் ஆண்டு தான் சுனில் நரைன் கேகேஆர் அணிக்குள் வந்தார். ஜெய்ப்பூரில் நாங்கள் அனைவரும் பயிற்சியில் இருந்தோம். அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் மதிய உணவை சாப்பிட முடிவு செய்தேன். அப்போது சுனில் நரைனையும் வருமாறு அழைப்பு விடுத்தேன். நாங்கள் இருவரும் அங்கு ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
ஆனால் அவர் பேசிய முதல் வார்த்தை என்ன தெரியுமா? ஐபிஎல் தொடரை பார்க்க எனது காதலியை அழைத்து வரலாமா? என்று தான் கேட்டார். அப்போது முதல் இப்போது வரை நாங்கள் இருவரும் சகோதரர்கள் போல் தான் இருக்கிறோம். எந்த நேரத்தில் என்ன பிரச்சனையாக இருந்தாலும், ஒரேயொரு போன் கால் போதும். அவருக்கு துணையாக நானும், எனக்கு துணையாக அவரும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.