சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிகளை நேரில் காண டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆடும் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் கிடைத்தாலும் அதன் விலை ஆயிரங்களில் தான் துவங்குகிறது.
ஆனால், சிலர் வெறும் 10 ரூபாய்க்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளை நேரில் கண்டு களித்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஆனால், இதில் ஒரு விஷயம் உள்ளது. இப்படி 10 ரூபாய்க்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளை சுவரில் இருக்கும் சிறிய ஓட்டைகள் வழியாகத் தான் பார்க்க முடியும்.

ஆம், சென்னை சேப்பாக்கம் ரயில் நிலையத்தின் மாடியில் உள்ள சுவரில் இருக்கும் ஓட்டைகள் வழியாக சிலர் சிஎஸ்கே ஆடும் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை காண குறைந்த பட்சம் 4500 முதல் 20000 வரை டிக்கெட் வாங்க செலவு செய்ய வேண்டும். ஆனால், சேப்பாக்கம் மாடி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் இருந்து போட்டிகளை இலவசமாக காணலாம்.
என்ன ஒன்று, நடைமேடைக்கு ரூ.10 டிக்கெட் வாங்கிவிட வேண்டும். இல்லையெனில் டிக்கெட் பரிசோதகர் அல்லது ரயில்வே காவலரிடம் சிக்க நேரிடும். அது மட்டுமின்றி இப்படி போட்டிகளை காணவென்றே ஒரு கூட்டம் சேப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு படை எடுக்கிறது என்பதால் மாலை 4 மணிக்கே அங்கே சென்று விடுவது நல்லது. முடிந்தால் பைனாகுலர் ஒன்றையும் எடுத்துச் செல்லலாம். ஏனெனில், எந்த பேட்ஸ்மேன் களத்தில் நிற்கிறார் என்பது கூட அங்கிருந்து சரியாக பார்க்க முடியாது. குத்துமதிப்பாக மஞ்சள் சட்டை அணிந்து ஒருவர் பேட்டிங் செய்தால் சிஎஸ்கே அணி வீரர் ஆடுகிறார் என புரிந்து கொள்ளலாம்.
எங்கள் பேச்சை கேட்டு யாராவது சென்னை சேப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று சிஎஸ்கே போட்டிகளை காணச் சென்று காவல்துறையிடம் அடி வாங்கினாலோ, சிக்கினாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். இந்த கட்டுரை சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இப்படியும் சிலர் போட்டிகளை பார்க்கிறார்கள் என்பதை சொல்வதற்காக ஒரு ஜாலிக்காக எழுதப்பட்டது மட்டுமே.