சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவரை இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என்பதில் சிஎஸ்கே நிர்வாகம், தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குறி வைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக கருதப்படும் சிவம் துபே தான் அந்த வீரர். 2022இல் சென்னை சூப்பர் கிங்ஸ் சிவம் துபேவை வாங்கிய பின் அவரை இம்பாக்ட் வீரராக பயன்படுத்த திட்டமிட்டது. வேகப் பந்துவீசும் திறன் கொண்ட ஆல் - ரவுண்டரான சிவம் துபேவை பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டது சிஎஸ்கே நிர்வாகம்.

அப்போதைய கேப்டன் தோனி சிவம் துபேவை அழைத்து தனது திட்டத்தை விலகி அவருக்கு நம்பிக்கை அளித்தார். அந்த சமயத்தில் தான் நல்ல பேட்ஸ்மேன் என்பதை அவரே ஒப்புக் கொள்ள தயங்கிய நிலையே இருந்தது. அந்த அளவுக்கு அவரது பேட்டிங் சராசரிக்கும் கீழ் இருந்தது.
அதன் பின் தோனி அவரை பந்து வீசவில்லை என்றாலும் பேட்டிங்கில் முக்கியத்துவம் அளிப்போம் என அவருக்கு நம்பிக்கை அளித்து அவரை முழு நேர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றினார். அதுவரை சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே குறிவைத்து சிக்ஸ் அடித்து வந்த சிவா துபே, தோனி அளித்த நம்பிக்கை மற்றும் சிஎஸ்கே அணி தனக்கு அளித்த பொறுப்பு ஆகியவற்றை உணர்ந்து கடும் பயிற்சி மேற்கொண்டு தற்போது வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் ரன் குவித்து வருகிறார்.
2023 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 418 ரன்கள் குவித்த சிவம் துபே, 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடி 242 ரன்கள் குவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் 7வது ஓவர் முதல் 16வது ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் தங்கள் அணிக்காக இரண்டு ஆண்டுகள் சிறப்பாக ஆடி வரும் சிவம் துபே எப்படியாவது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என சிஎஸ்கே அணியினர் அனைவரும் கருதுகின்றனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதை கூறி இருந்தார்.
இந்திய அணியின் தேர்வுக் குழுவால் சிவம் துபே, ஆல் - ரவுண்டராக மட்டுமே பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அடுத்து வரும் போட்டிகளில் சிவம் துபே திடீரென பந்து வீசவும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம், அவர் சிஎஸ்கே அணிக்காக பந்து வீசுவதை கணக்கில் கொண்டு இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாம்.
அப்படி சிவம் துபே தேர்வு செய்யப்பட்டால் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியில் அழுத்தம் ஏற்படும். இப்போதே ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சரியாக ரன் குவிக்காததால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.