சென்னை: எனது கடினமான காலங்களில் கூட நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி தனக்கு வாய்ப்பளித்ததாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடக்கவே முடியாத ஒரு இரவை கொடுத்த வீரர் ஷர்துல் தாக்கூர். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மலிங்கா வீசிய ஸ்லோயர் பந்தை கணிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறிய ஷர்துல் தாக்கூர், மும்பை அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் மீள்வதற்கு நீண்ட நாட்கள் எடுத்தது.

இவ்வளவு ஏன், ஷர்துல் தாக்கூருக்கும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. கிட்டத்தட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி முடிவடைந்த பின் 2 மணி நேரத்திற்கும் மேலாக முகத்தை டவல் கொண்டு மூடி கண்ணீர் சிந்தி கதறினார் ஷர்துல் தாக்கூர். ஆனால் அன்றைய நாளில் அடைந்த தோல்விக்கு பின் ஷர்துல் தாக்கூரின் வளர்ச்சி வேறு விதமாக மாறியது.
இந்திய அணிக்காகவும் சரி, சிஎஸ்கே அணிக்காகவும் சரி.. சாம்பியன் பவுலரை போல் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் எப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் ஆர்டர் சொதப்புகிறதோ, அப்போதெல்லாம் ஷர்துல் தாக்கூர் அதிரடியாக சில அரைசதங்கள் விளாசி இந்திய அணியை காப்பாற்றியுள்ளார். எந்த நேரத்திலும் ஆட்டத்தை மொத்தமாக திருப்ப கூடிய வீரராக மாறினார் ஷர்துல் தாக்கூர்.
இதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் விரும்ப கூடிய வீரர் என்று சொல்ல முடியும். அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.4 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி ஷர்துல் தாக்கூரை வாங்கியுள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பின் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியுள்ளார். சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கிய பின், உடனடியாக ஜெர்சியை மாற்றி வீடியோ வெளியிட்டார் ஷர்துல்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் விளையாடுவது குறித்து ஷர்துல் தாக்கூர், தமிழக வீரர் அஸ்வினின் யூட்யூப் சேனலில் பேசுகையில், சிஎஸ்கே அணி எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளது. 2019ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தோல்விக்கு பின், சிஎஸ்கே அணி என் மீது கூடுதலாக நம்பிக்கை வைத்து அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கியது.
சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் நான் தான். இம்முறையும் அதேபோல் மிகச்சிறந்த பந்துவீசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் சிஎஸ்கே ரசிகர்களையும், அன்பையும் பெற காத்திருக்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு ரசிகர்களின் அளிக்கும் வரவேற்பை போல் வேறு எந்த அணி வீரருக்கும் நான் வரவேற்பளித்து பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.