சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறிய புதிய சீசன், புதிய ரோல் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் தோனி. இந்த சீசனே தோனியின் கடைசி சீசன் என்று பார்க்கப்பட்டு வரும் சூழலில், நேற்றிரவு சிஎஸ்கே பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை வந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக தனதி ஃபேஸ்புக் பக்கத்தில், "புதிய சீசனில் புதிய ரோலில் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் குழப்பமடைந்தனர். கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா அல்லது ஆலோசகராக பணியாற்ற உள்ளாரா என்று கேள்விகள் எழுந்தன.
இன்னும் சிலரோ, பேட்டிங் ஆர்டரில் தோனி முதல் 4 இடங்களில் விளையாடுவார் என்றும் கூறி வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் சிலர் இது வெறும் விளம்பரத்திற்காக என்று விமர்சித்தனர். இந்த நிலையில் தோனியின் புதிய ரோல் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. ஜியோ சினிமாஸ் தரப்பில் தோனி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐபிஎல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இளமையான தோனி, வயதான தோனி என்று இரு வேடங்களில் தோனி ஐபிஎல் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை தான் புதிய ரோல் என்று தோனி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆரம்ப காலம் முதலே தோனிக்கு சோசியல் மீடியா அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கிடையாது. விளம்பர நிறுவனங்கள் தொடர்புடைய வீடியோக்களை பகிர்வதுடன் சோசியல் மீடியா பயன்பாடு முடிந்துவிடும்.
ஏற்கனவே 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை முன்பாக தோனி முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்தார். வழக்கமாக தோனிக்கு எந்த நிகழ்வையும் பரபரப்பாக்கும் எண்ணம் இருக்காது. ஓய்வு அறிவிப்பை கூட சாதாரணமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலமாக வெளியிட்டார். இதனால் தோனி என்ன அறிவிக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
அப்போது ஓரியோ பிஸ்கெட்டின் புதிய வெளியீட்டை அறிமுகப்படுத்தி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் பலரும் தோனியை கிண்டல் செய்து வந்தனர். தற்போது அதேபோன்ற ஒரு அறிவிப்பையே தோனி வெளியிட, மீண்டும் அதேபோல் ஜியோ சினிமாஸ் தரப்பில் வெளியான ப்ரோமோவில் நடித்து ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளார்.