சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறாமல் போகிறது.
இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில் ருதுராஜ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ருதுராஜ் தலைமையில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் வெற்றி 7 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது.

சிஎஸ்கே அணியில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் போனது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 42 வயதாகி இருக்கும் தோனிக்கு சென்னையில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நடைபெறவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லை ஓய்வு முடிவை அறிவித்துவிட்டாரா என்று சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டி அளித்திருக்கிறார். அது குறித்து தற்போது பார்க்கலாம். இதுவரை தோனி அடுத்து சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து எந்த ஒரு முடிவையும் எங்களுக்கு அறிவிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தோனி எந்த முடிவை எடுக்கிறாரோ. அவருக்கு 100% நாங்கள் துணை நிற்போம்.
இதுவரை அப்படித்தான் எங்களுடைய அணி இருக்கின்றது. தோனி என்ன முடிவு எடுக்கிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர் எது செய்தாலும் நாங்கள் கேட்போம். என்னை பொறுத்தவரை நூறு சதவீதம் தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்று நினைக்கின்றேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இது எங்களுடைய கருத்து தான். அடுத்த சீசனிலும் ருதுராஜ் தான் கேப்டனாக இருக்கப் போகிறார். ஏனென்றால் ருதுராஜ் தேர்வு செய்தது தோனியும் பயிற்சியாளர் பிளமிங்கும் தான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு இருவரும் ருதுராஜ் கேப்டன் என்று முடிவு செய்துவிட்டார்கள். ருதுராஜ் நடப்பு தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு சீனியர் வீரர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள்.
கேப்டன்ஷிப் பதவியில் இருந்தும் அது அவருடைய பேட்டிங்கை பாதிக்கவில்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. இதில் சிஎஸ்கேவில் எதிர்காலம் ருதுராஜ் தலைமையில் தான் இருக்கின்றது. ஆனால் இது எளிதான காரியம் கிடையாது. ஏனென்றால் தோனி என்ற ஜாம்பவானின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த பொறுப்பை ருதுராஜ் மேற்கொள்ளும் போது நிச்சயம் கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.