சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோனிக்கு 42 வயது ஆகிவிட்டதால் இது அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தோனி தன்னுடைய கேப்டன் பொறுப்பை நடப்பு சீசனிலேயே ராஜினாமா செய்து விடுவார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன், சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து அணி நிர்வாகத்தின் மத்தியில் பேச்சு நடந்தது. ஆனால் அணி, உரிமையாளரான சீனிவாசன் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிட்டார். கேப்டன் யார்? துணை கேப்டன் யார் என்பது குறித்து நாம் எதுவும் பேசத் தேவையில்லை. அது பயிற்சியாளர் மற்றும் தோனி கையில் தான் இருக்கிறது.
அவர்கள் எந்த முடிவை எடுக்கிறார்களோ அந்த முடிவு ரசிகர்களிடம் சொல்லப்படும். பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தோனி அணியை எப்படி வழி நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கட்டும். அதுவரை நாம் அனைவரும் அமைதியாக இருப்போம் என்று சீனிவாசன் தம்மிடம் கூறியதாக சிஎஸ்கே சி ஏ ஓ விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மேலும் இந்த தொடரில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லுமா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த காசி விஸ்வநாதன், நாங்கள் எப்போதுமே முதலில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற தான் முயற்சி செய்வோம். அதுதான் எங்களுடைய முதல் குறிக்கோள். ஒவ்வொரு போட்டியிலும் எவ்வாறு விளையாடுகிறோமோ அதை பொறுத்து தான் வெற்றி இருக்கும்.
இதை நாங்கள் ஒவ்வொரு சீசனிலும் கடைப்பிடித்து வருகிறோம். முதலில் லீக் போட்டிகள் குறித்து கவனம் செலுத்தவும், அதன்பிறகு பிளே ஆப் குறித்து பார்ப்போம். சிஎஸ்கே அணி மீது எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பும் அழுத்தமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக விளையாடுவதால் எங்களுடைய வீரர்களும் இந்த அழுத்தத்திற்கு விளையாடி பழகி விட்டார்கள் என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.