சென்னை : கிரிக்கெட் விவாதம் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் மேத்யூ ஹெய்டன் பங்கு பெற்றார். அவர் ஒரு முன்னாள் சிஎஸ்கே வீரராக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறி மும்பை இந்தியன்ஸ் அணியால் சிஎஸ்கே போன்ற கட்டமைப்பை உருவாக்க முடியாது. அதற்கு காரணம் சிஎஸ்கே ரசிகர்கள் தான் என விளக்கினார்.
2008 முதல் 2010 வரை மேத்யூ ஹெய்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். 2010இல் சிஎஸ்கே அணி கோப்பை வென்ற போது ஓய்வு பெற்றார். அதனால், அவர் சிஎஸ்கே வீரராகவே இன்று வரை அறியப்படுகிறார். இப்போது அவர் வர்ணனையாளராக இருந்தாலும் அவரை எங்கே பார்த்தாலும் சிஎஸ்கே வீரர்கள் தங்கள் அணியை சேர்ந்தவர் என்றே கூறுவதாகவும், அப்படியே தன்னை நடத்துவதாகவும் குறிப்பிட்டார். மேலும், சிஎஸ்கே ரசிகர்களின் அன்புக்கு, உணர்ச்சிக்கு முன் வேறு எந்த அணியும் நிற்க முடியாது என்றார் ஹெய்டன்.

"சிஎஸ்கே ரசிகர்கள் ஹீரோக்களை விரும்புகிறார்கள். தோனி அப்படி ஒரு ஹீரோ. அதே சமயம் அவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள். அவர்களின் ஈடுபாட்டை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்கள் ஜடேஜாவை எப்படி பார்கிறார்கள் என்பதை பார்த்தாலே உங்களுக்கு புரியும். அவர் சிஎஸ்கேவில் புகழ் பெற்றவராக இருக்கிறார். அவர்களின் ஈடுபாடு, ஆற்றல் மற்றும் ஊக்கம் அதிகமாக உள்ளது." என்றார் ஹெய்டன்.
மேலும், "சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரிலேயே இல்லாத போது அவர்கள் ட்ரெயினில் கிளம்பி புனே சென்று தோனியை ஆதரித்தார்கள். அதைத் தான் நான் கூறுகிறேன். கிரிக்கெட் மீதான அவர்களின் உணர்ச்சி மற்ற எந்த ஐபிஎல் அணியையும் விட மிக அதிகமாக உள்ளது. நான் 2010இல் ஓய்வு பெற்று விட்டேன். இப்போது வர்ணனையாளராக இருக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் கூட அந்த அணிக்காக ஒரு ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் இருக்கிறோம்." என்றார் ஹெய்டன்.
இதை எல்லாம் கூறிய ஹெய்டன் கடைசியாக அதிரடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "இது போன்ற விஷயங்களால் தான் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தோனி சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெறவே மாட்டார். அவர் நம்பர் 1, நான் நம்பர் 2, ரெய்னா நம்பர் 3. இது அப்படியே செல்லும். இந்த பாரம்பரியம் சிஎஸ்கே அணி, சேப்பாக்கம் மைதானம் என சென்று கொண்டே இருக்கும். இதைத் தான் சிஎஸ்கே ரசிகர்கள் முக்கியமாக கருதுகிறார்கள். அவர்கள் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களை விட்டு விலக மாட்டார்கள்." என்றார் மேத்யூ ஹெய்டன்.