சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனையை சமன் செய்திருக்கிறது. இந்த நிலையில் நடப்பு சீசன் தோனியின் கடைசி தொடராக பார்க்கப்படுகிறது.
இதில் கோப்பையுடன் தோனி விடை பெறுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக டெத் பௌலிங் இருந்தது. அதாவது கடைசி கட்ட ஓவர்களில் சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவார்கள்.

இதனால் சிஎஸ்கே தங்களுடைய சுழற் பந்து வீச்சு பலத்தை வைத்து பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்று வந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்கா போன்ற வீரர்களால் அபார வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியும் மலிங்கா போலவே பந்து வீசக்கூடிய இலங்கை வீரர் பதிராணாவை கண்டுபிடித்தார்கள்.
இதன் மூலம் தோனி, பதிராணாவை பயன்படுத்தி கடந்த சீசனில் பல போட்டிகளில் வெற்றி பெற்றார். அபாரமாக பந்து வீசிய பதிராணா,கடந்த சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி அசத்தினார்.இதனால் சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரராக பதிராணா விளங்கினார்.
இந்த நிலையில் பதிராணாவை அனைத்து விதமான போட்டிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தோனி, இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுரை வழங்கியிருந்தார். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிராணாவை ஓய்வின்றி பயன்படுத்தியது. எந்த முக்கியத்துவமும் இல்லாத வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் பதிராணாவை இலங்கை விளையாட வைத்தது.
இரண்டாவது டி20 போட்டியில் பதிராணா அபாரமாக பந்து வீசி 3.4 ஓவரில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் தனது ஐந்தாவது பந்தை வீச வந்தபோது பதிரானாவுக்கு திடீரென்று காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பதிராணா கடும் அவதி அடைந்தார். இதனை அடுத்து பதிராணா போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார்.
பதிராணாவின் காயம் தன்மை குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால் அவர் நடக்கவே முடியாமல் மைதானத்தை விட்டு விலகியதை வைத்துப் பார்த்தால் அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
பதிராணா இல்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். பதிராணாவுக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் முஸ்தபிஷூர் ரஹ்மான் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். ஆனால் பதிராணா போல் சிறப்பாக பந்து வீசும் வெளிநாட்டு பவுலர் சிஎஸ்கே அணியில் தற்போது இல்லை.