இந்த வேகப்பந்து வீச்சாளர் மட்டும் வந்தால், சிஎஸ்கே பலம் பல மடங்கு உயரும்.. ஏலத்தில் குறிவைத்த தோனி
சென்னை :ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எந்த வீரர்களை மினி ஏலத்தில் எடுத்தால் அது நமது அணியின் பலத்தை அதிகரிக்கும் என்பது குறித்து ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உலகக் கோப்பை சாம்பியனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்டை, ஆர் சி பி அணி விடுவித்திருப்பது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் மற்ற அணி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் ஹேசல்வுட் அபாரமாக பந்து வீசி கட்டுக்கோப்பாக ரன்களை விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துபவர். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஹேசல்வுட்டும் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஹேசல்வுட்டை சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஹேசல்வுட்டை ஆர்சிபி அணி விடுவித்து இருப்பது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் சிஎஸ்கே அணியில் தற்போது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் குறிப்பிடத் தகும் வகையில் இல்லை. இதன் காரணமாக ஹேசல்வுட்டை எப்படியாவது சிஎஸ்கே அணி மீண்டும் ஏலத்தில் வாங்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது. ஹேசல்வுட்டுக்காக 10 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தோனி அறிவுறுத்தி இருக்கிறாராம். ஹேசல் வுட் சிஎஸ்கே அணிக்கு திரும்பினால் பவர் பிளே மற்றும் ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்தை வீச ஒரு வீரர் கிடைத்து விடுவார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணியில் இருக்கும் குறை பெரிய அளவில் தீர்ந்துவிடும். இது சிஎஸ்கே வின் பெரிய பலமாக பார்க்கப்படும். ஆர்சிபி அணி ஏன் அவரை விட்டது என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை. இது ஆர்சிபி அணி செய்த மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications